சீனாவுக்கு வெளியே தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் இது குறித்து சர்வதேச அளவில் கவலைகள் அதிகரித்துள்ளன.
தென்கொரியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை வரை வெளியான தகவல்களின்படி கொரோனா வைரஸ் தொற்றால் 600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுன், 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 132-ஆக உயர்ந்துள்ளது. இருவர் பலியாகியுள்ளனார்.
ஈரானில் 43 பேர் தொற்றுக்குள்ளாகியதுடன் எட்டு பேர் மரணமடைந்துள்ளனர்.
சீனாவில் பாதிப்பு குறைவடைந்து வருவதை அண்மைய நாட்களில் வெளியான புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டும் நிலையில் சீனாவுக்கு வெளியே ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா தாக்கம் விரிவடைந்து வருவது சர்வதேச அளவில் பாரிய கவலைகளைத் தோற்றுவித்துள்ளது.
சீனாவுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிராத நாடுகளிலும் வைரஸ் தாக்கம் அதிகரித்துவருவது குறித்து மருத்துவ உலகினரும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.